எச்சில் துப்புவது ஏன் மோசமானது?
கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக இருந்து, தொலைக்காட்சி நிகழ்ச்சியாளராக மாறிய ஜேமி காராகர், தன்னை கோபமூட்டிய காரில் இருந்த ஒரு குடும்பத்தை நோக்கி எச்சில் துப்பிய காணொளிக்கு எதிராக மக்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
'ஸ்கைய் ஸ்போட்ஸ்' ஆய்வாளர் வேலையில் இருந்து காராகர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சரி, எச்சில் துப்புவது ஏன் பிறருக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது?
அசிங்கமான காரணி
"இழிவானது", "அற்பமானது, "எச்சில் துப்புவதைவிட கீழானது எதுவுமில்லை" போன்ற குறிப்புகள் இந்த காணொளி பற்றிய கருத்துக்களில் பதிவிடப்பட்டுள்ளன.
எல்லாவற்றையும் விட, ஏன் வன்முறையையும் விட சிலருக்கு எச்சில் உமிழ்வது மோசமானதாக தெரிகிறது.
இந்த நடவடிக்கை கோபம் ஊட்டுகிற, மரியாதை குறைவான செயல்பாடாக பார்க்கப்படுகிறது.
ஆனால், எப்போதும் அத்தகைய செயல்பாடாக எச்சில் துப்புவது அமைவதில்லை.
முன்னதாக, ஐரோப்பாவில் எச்சில் துப்புவது என்பது சமூக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்கமாகவே இருந்து வந்தது. ஆனால், 19வது நூற்றாண்டு நன்னடத்தை மாற்றங்களால்தான் இன்றைய நிலை உருவாகியுள்ளது.
மேலும், எச்சில் துப்புவதை நோய்தொற்று பரவலோடு தொடர்புபடுத்தியதால் பொது சுகாதார பரப்புரையாளர்கள் எச்சில் துப்புவதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கினர்.
1940களில் டிபி எனப்படும் காசநோய் பெருமளவு பரவியிருந்தது. "எச்சில் துப்புவதற்கு தடை" என்கிற அடையாளங்களைய எல்லா பேருந்துகளிலும் பார்க்கலாம்.
சுகாதார ஆபத்து
எச்சில் துப்பிவிட்டால் மிகவும் குறைவான அளவே தொற்றுநோய் பரவும் சூழ்நிலை நிலவுகிறது என்பது தெரிய வந்துள்ளது.
ஜலதோஷம் அல்லது காய்ச்சல் வருவதற்கான குறைந்தபட்ச வாய்ப்புகளே உள்ளன.
காசநோய், ஹெபடைடிஸ், மூளைக்காய்ச்சல், ஹெர்பஸ் வைரஸ் போன்ற பொது வைரஸான சைட்டோமெகலோவைரஸ் மற்றும் சுரப்பிகள் சார்ந்த காய்ச்சல் போன்ற பல நோய்களுக்கு காரணமான எப்ஸ்டென் -பார் வைரஸ் போன்றவை எச்சில் துப்புவதால் பரவுகின்றன.
யாராவது உங்கள் மீது எச்சில் துப்பிவிட்டால், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பிரிட்டன் தேசிய சுகாதார சேவை பரிந்துரைக்கிறது:
- சோப்பாலும், அதிக நீராலும் எச்சிலை கழுவிவிடுங்கள்.
- எச்சில் உங்களுடைய கண்கள், மூக்கு அல்லது வாய்க்குள் சென்றுவிட்டால், அதிக அளவிலான குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள்.
- நோயத்தொற்று ஆபத்தை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று அறிவுரை பெறவும்.
எச்சில் துப்புவது தாக்குதலா?
கால்பந்து விளையாட்டு மைதானத்தில் எச்சில் துப்புவது வழங்கமாக நடைபெறும் விடயம்தான்.
ஆனால், போட்டியாளர் மீது எச்சில் துப்புவது "வன்முறை மிக்க நடத்தை"யாக கால்பந்து விளையாட்டின் உலக நிர்வாக அமைப்பான ஃபிஃபாவால் வரையறுக்கப்பட்டுள்ளது.
போட்டியாளர் அல்லது பிறர் மீது எச்சில் துப்புவது என்பது அவர்களுக்கு "எதிரான நடவடிக்கை" என்று கால்பந்து கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
பெரும்பாலான நேரங்களில் திட்டமிட்டு எச்சில் துப்பினால், அதுவொரு 'தாக்குதல்' என்றும், அதிகாரிகளை பாதுகாப்பதற்கு எச்சில் பாதுகாப்பு தலையுறையை அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பிரிட்டனின் 49 போலீஸ் படைகளின் 17வது பிரிவு, வெளிப்படையாக தெரிகின்ற பாதுகாப்பு தலையுறையை பயன்படுத்தியுள்ளனர்.
வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் போலீஸ் படை இதனை அறிமுகப்படுத்திய சமீபத்திய படைப்பிரிவாகும்.
2016ம் ஆண்டு 231 அதிகாரிகள் மீது எச்சில் துப்பப்பட்டது என்று இந்தப் படைப்பரிவு தெரிவித்திருக்கிறது.
ஆனால், இவ்வாறு முகத்தை மூடுவது கொடூரமானது, இகழ்ச்சிக்குரியது என்று லிபர்ட்டி என்கிற செயற்பாட்டாளர் குழு கண்டித்துள்ளது.
குற்றத்திற்கு அபராதம்
1990ம் ஆண்டு வரை எச்சில் துப்புவது குற்றம் என்றும், அவ்வாறு செய்தால் 5 பவுண்ட் அபராதம் என்று பிரிட்டனில் நடைமுறை இருந்து வந்தது.
எச்சில் துப்பினால் அபராதம் விதிக்க வேண்டும் என்ற கருத்து சமீப காலத்தில் மீண்டும் உயிர்பெற்றுள்ளது.
பொதுவெளியில் எச்சில் துப்புவது சட்டப்பூர்வமற்றது என்ற விதிமுறையை 2013ம் ஆண்டு லண்டனிலுள்ள என்ஃபீல்ட் கவுன்சில் அறிமுகப்படுத்தியது.
இதனை அறிமுகப்படுத்துவதற்கு செயற்பாடுகளை முன்னெடுத்த பரப்புரையாளர் கவுன்சிலர் கிரிஸ் பான்ட், எச்சில் துப்புவது "முற்றிலும் தவறு" என்றும், பண்பட்ட சமூகத்தில் பொறுத்துக்கொள்ள முடியாத "இழிவான நடத்தை" என்றும் விளக்கமளித்துள்ளார்.
"எச்சில் துப்புவது, கிருமிகளை பரப்புகிற, சுகாதார கேடுகளுக்கு காரணமாகிற முற்றிலும் அருவருப்பான, இழிவான பழக்கம் என்று பெரும்பாலான மக்கள் எண்ணுகின்றனர் என்பது என்னுடைய கருத்து" என்று அவர் தெரிவிக்கிறார்.
"என்ஃபீல்டில் எச்சில் துப்புவதை தடை செய்திருப்பது, லண்டனில் அதிகரித்து வருகின்ற காசநோயை தடுப்பதற்கு உதவும்" என்று அவர் மேலும் கூறினார்.
அதே ஆண்டு, எச்சில் துப்பியதால் பிடிபட்டால், 80 பவுண்ட் அபராதம் என்று குறிப்பிட்ட அபராத தொகையை லண்டனின் வட கிழக்கிலுள்ள வால்தாம் கவுன்சில் அறிமுகப்படுத்தியது.
எச்சில் துப்புவதை "குப்பை" என்று வகைப்படுத்திய இந்த கவுன்சில், இதற்கான விதிமுறையை உருவாக்காமல், இரண்டு பேரை நீதிமன்றத்திற்கு வெற்றிகரமாக கொண்டு சென்றது.
எச்சில் துப்பும் பைகள்
உலகின் பல நாடுகளில் எச்சில் துப்புவது பொதுவாக அனைவரின் பழக்கமாக உள்ளது.
பலமுறை இந்த பிரச்சனையை சமாளிக்க சீனா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
2008ம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்சில் நடத்தப்பட்ட பரப்புரையின்போது, 'எச்சில் துப்பும் பைகளை' தொண்டர்கள் வழங்கினர்.
நன்னடத்தையை மேம்படுத்தும் விதமாக பாதைகளில் எச்சில் துப்ப வேண்டாம் என்பதை வலியுறுத்தும் பதாகைகளை பெய்ஜிங் மாநகரம் முழுவதும் சீனா வைத்திருந்தது.
"பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் மூலம் பண்பட்ட, நல்நடத்தையை வெளிகாட்டி, பங்குகொள், பங்களி, மகிழ்ச்சியாக இரு" என்று இந்தப் பதாகைகளில் எழுதப்பட்டிருந்தது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்