சிறிய நாடான கத்தார் பிரம்மாண்டமாக வளர்ந்தது எப்படி?

படையை பார்வையிடும் மன்னர்.

பட மூலாதாரம், Julian Herbert/Getty Images

ஒரு மாதம் முன்பு ஒரு செவ்வாய்க்கிழமை காலை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வழக்கம்போல் தனது போனை எடுத்து, டிவிட்டரை திறந்தார்….

அன்று அவர் டிவீட் செய்த செய்தி என்ன? போலி செய்தி ஊடகங்கள்? "மோசடி ஹிலாரி" அல்லது ஜனநாயக கட்சி?… இல்லை. மத்திய கிழக்கில் இருக்கும் சிறிய நாடு கத்தார்.

"செளதி அரேபியப் பயணம் நன்றாக இருந்தது… அதற்கு நன்றி சொல்லலாம்" என டிரம்ப் டிவீட் செய்கிறார், "தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பது குறித்து கடுமையான முடிவு எடுக்கப் போவதாக சொன்னார்கள்.. அவர்கள் சொல்லும் அனைத்தும் கத்தாரை சுட்டிக்காட்டுகிறது".

கத்தார் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக குற்றம் சாட்டிய செளதி அரேபியா மற்றும் பிற அண்டை நாடுகள் அரசாங்க ரீதியான உறவுகளையும், வான்வழி, கடல்வழி மற்றும் சாலைத் தொடர்புகளை துண்டித்துக் கொண்டன. மேலும், கடினமான நிபந்தனைகள் கொண்ட பட்டியலையும் வழங்கின, அதில் ஒன்று அல் ஜசீரா செய்தி வலையமைப்பை மூடுவது.

கத்தார் நிபந்தனைகளை நிராகரித்துவிட்டது. அண்டை நாடுகள் தடையின் காரணமாக, நாட்டின் உணவு மற்றும் பிற தேவைகளை தனது நட்பு நாடுகளிடம் இருந்து விமானம் மூலம் பெறுகிறது.

இது ஒரு சிக்கலான சூழ்நிலை. டிவிட்டரில் அமெரிக்க அதிபர் டிரம்பை தொடர்பவர்களின் ஜூன் மாதப் பதிவுகளில், அவர் முன் வைக்கப்பட்ட எளிமையான கேள்வி இது.

பிராமண்டா கட்டட அமைப்பு

பட மூலாதாரம், Warren Little/Getty Images

கத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது?

பிபிசி உலக சேவைக்காக ஆராய்கிறர் ஜேம்ஸ் ஃப்ளெட்சர். இதில், கத்தாரைப் பற்றிய பல ஆய்வுகளை நடத்திய நிபுணர்களிடமிருந்து வெளிவராத பல தகவல்களை இங்கு தருகிறார்.

நவீனமயமான நாடு

"கத்தாரின் பெருமைக்கும், சிறப்புக்கும் மிகப்பெரிய அடிப்படை இருக்கிறது. அது "முத்துக் குளிப்பு" தொழிலுக்கு பெயர் பெற்றது. இன்று தோஹா இருக்கும் இடத்தில் ஒருகாலத்தில் முத்துக்குளிப்பு கிராமம் இருந்தது" என்கிறார் அமெரிக்காவில் ஜார்ஜியா பல்கலைக்கழக பேராசிரியர் அலன் ஃப்ரம்ஹெர்ஜ். இவர், 'கத்தார்: ஏ மாடர்ன் ஹிஸ்டரி' என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

பிட்டா (Bidda) என்று அழைக்கப்பட்ட தோஹா, எண்ணெய்க்கு சமமாக முத்தும் மதிப்புமிக்க பொருளாக இருந்த இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், மிகவும் திறமைமிக்க முக்குளிப்பு மையமாக திகழ்ந்தது.

அரேபிய வளைகுடாப் பகுதியில் வளைவான பகுதியில் அமைந்திருக்கும் கத்தார், வளைகுடா நீர்நிலையில் சவூதி அரேபியாவில் இருந்து வெளியே, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகளுக்கு இடையில் தானே ஒரு முத்தைப் போன்று அமைந்திருக்கிறது. இதன் சிறிய பகுதி பெரும்பாலும் மணற்பாங்கானது. இந்த நாடு, 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் பெரும்பகுதி பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த்து.

வளைகுடாப் பகுதியில் கத்தார் மட்டுமே பொறுப்பான நாடு என்று கருதிய பிரிட்டன், அதனை பாதுகாக்கவும், உறவுகளை நீட்டிக்கவும் விரும்பி 1868 இல் மொஹம்மத் அல்-தானியை தேர்ந்தெடுத்தது.

அல்-தானி. அந்த பெயர் அப்படியே நிலைத்துவிட்டது, ஏனெனில் இதே குடும்பம்தான் இன்றும் கத்தாரை ஆட்சி புரிகிறது. சிறிய நாடான கத்தாருக்கு, அதன் மிகப்பெரிய அண்டை நாடுகளிடம் இருந்து பாதுகாப்பு தேவைப்படும் நிலையே இன்றும் தொடர்கிறது.

2022 ஆம் ஆண்டு விளையாட்டு அரங்கம்

பட மூலாதாரம், Neville Hopwood/Getty Images

கத்தார் செளதி அரேபியாவால் சுலபமாக ஆக்ரமிக்கப்படலாம் என்ற அச்சம் தொடர்வதால், அதை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்க அல்-தானி விரும்புவதாக ஃப்ரம்ஹெர்ஜ் கூறுகிறார்.

இன்று கத்தாரில் வானை முட்டும் மிகப்பெரிய கட்டடங்களை பார்க்கலாம், ஆனால் இருபதாம் நூற்றாண்டில் கத்தாரின் நிலை வேறாக இருந்த்து.

இன்று கத்தார் மக்களிடம் விலையுயர்ந்த பொருட்களும், மதிப்பிட மலைப்பு ஏற்படுத்தும் அளவில் தங்கமும், எண்ணிலடங்கா செல்வமும் இருக்கலாம். ஆனால், 1950களில், கத்தார் மற்றும் வளைகுடா நாடுகள் நம்பமுடியாத அளவிற்கு நெருக்கடியைக் கொண்டிருந்தன. அது 'பசியின் ஆண்டுகள்' என்று அழைக்கப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கத்தாரில் எண்ணெய் வளம், இயற்கையிலேயே புதைந்து கிடந்தது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து உலகிலேயே அதிக இயற்கை எரிவாயு வளம் கொண்ட நாடு கத்தார் என்பதும் தெரியவந்தது. இயற்கை வளங்கள் அகழ்ந்தெடுக்க தொடங்கியதும், நாட்டின் வறுமை நிலை அதல பாதாளத்தில் புதையுண்டுபோனது.

1971-ஆம் ஆண்டு பிரிட்டனில் இருந்து கத்தார் விடுதலை பெற்றதும், கத்தாரின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. அரசர் ஷேக் காலிஃபா, தங்களுடைய அதிக சக்திவாய்ந்த, பெரிய அண்டை நாட்டையே சார்ந்திருக்க வேண்டிய நிலைமை உருவானது.

பிரிட்டனில் கத்தாரின் அரசுமுறை பயணம்.

பட மூலாதாரம், Dan Kitwood - WPA Pool/Getty Images

படக்குறிப்பு,

பிரிட்டனில் கத்தாரின் அரசுமுறை பயணம்.

வெளியுறவுக் கொள்கையில் செளதி ஆதிக்கம்

கத்தாரில் ஷேக் காலிஃபாவின் அனுமதியுடன் உள்நுழைந்த செளதி அரேபியா, கத்தாரின் வெளியுறவுக் கொள்கைகளின்மீது ஆதிக்கம் செலுத்தியதாக ஃப்ரம்ஹெர்ஜ் கூறுகிறார்.

ஆனால், செளதியின் இந்த அதிகார அடக்குமுறை, 1952 ஆம் ஆண்டு பிறந்து, பிரிட்டனில் ராணுவ பயிற்சி பெற்ற ஷேக் காலிஃபாவின் மகன் ஷேக் ஹமத் ஷேக் ஹமாதிடம் பலிக்கவில்லை.

தோஹாவில் ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் நான் அவரை சந்தித்தது நினைவுக்கு வருகிறது. என்னுடைய கணிப்பின்படி, அவர், தற்போதைய சிக்கலை பணிவுடன் ஆனால் தனது அதிகாரத்தை விட்டுத்தராமல் அணுகுவார் என்று நம்புகிறேன் - ஃப்ரோம்ஹெர்ஜ்

அண்டை நாடுகள் மற்றும் உலகின் பிற நாடுகளுடனான உறவுகளை, தனது தந்தையிடமிருந்து மிகவும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கிறார் ஷேக் ஹமாத் என்பதை முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஷேக் ஹமாதின் பார்வையில், கத்தார், நன்கு அறியப்படவேண்டும், அங்கீகரிக்கப்படவேண்டும், எளிதாக ஆக்கிரமிக்க முடியாததாக மாற்றவேண்டும் என்பதுதான் என்கிறார் ஃப்ரம்ஹெர்.

வானளாவிய கட்டடங்கள்

பட மூலாதாரம், Gallup/Getty Images

1990 ஆம் ஆண்டுகளில் தொடக்கத்தில் இருந்தே ஷேக் ஹமாத் கத்தாரின் தினசரி நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், நிதிப் பொறுப்புகளை அவரது தந்தையே நிர்வகித்தார். 1995 ஜூன் மாதம் கத்தார் அரசர் சுவிட்சர்லாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, ஷேக் ஹமாத் ஆட்சிக் கவிழ்ப்பு நாடகத்தை நிறைவேற்றி அதிகாரத்தை கைப்பற்றினார். ஆயுதமின்றி ரத்தம் சிந்தாமல் அதிகாரம் கைமாறியது. ஆனால் அண்டைநாடுகள், கத்தார் நாட்டின் புதிய இளம் தலைவரின் வருகையால் திகைத்துப் போயின.

மூத்த தலைமுறைக்கு, புதிய தலைமுறையின் செயல்பாடுகள், அச்சுறுத்தலாக இருந்திருக்கலாம். இதுவரை தங்கள் விருப்பப்படி செய்யப்பட்டு வந்த வெளியுறவுக் கொள்கையை உருவாக்கும் திறமை கொண்டவராக ஷேக் ஹமாத் இருப்பதால், கத்தார் தங்களிடமிருந்து விலகிவிடும் என்ற அச்சம் செளதி அரேபியாவிற்கு கண்டிப்பாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்,

கத்தார் ஏன் சிறப்பு வாய்ந்தது? கத்தாருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? ஒருபுறம் பார்க்கப்போனால் ஒன்றுமே இல்லை, மிகப்பெரிய, சக்திவாய்ந்த நாடுகளை அண்டை நாடுகளாகக் கொண்ட கத்தார் மணற்பாங்கான ஒரு சிறிய நிலப்பகுதியை கொண்டது. ஆனால் 1995இல் புதிய தலைவர் ஆட்சிக்கு வந்ததும் ஏற்பட்ட மாற்றம் என்ன? அவர் மாற்றத்தை எப்படி ஏற்படுத்தினார்?

ஓர் அடையாளம்

பத்தாண்டுகளுக்கு முன்னர், நானும் எனது மனைவியும், இதுவரை செல்லாத வெளிநாட்டிற்கு சென்று அங்கு ஒரு வருடம் வசிக்கலாம் என்று திட்டமிட்டோம்.

ஷேக் ஹமாத் அதிகாரபீடத்தை கைப்பற்றிய பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட கத்தாரால் கவரப்பட்டவர்களில் ஒருவர்தான் மெஹ்ரன் கம்ராவா.

மத்திய கிழக்கு நாடுகளின் புதிய இதயமாக திகழும் கத்தார், கடந்த பத்தாண்டுகளாக, வர்த்தகம், போக்குவரத்து மையம், அரசியல், ராஜங்க ரீதியாக என பலமுனைகளில் ஈர்ப்பின் மையமாக விளங்குகிறது, என்கிறார் கம்ராவா.

ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக்கத்தில் சர்வதேச மற்றும் பிராந்தியக் கல்வி மையத்தின் இயக்குனர் மெஹ்ரன் கம்ராவா. இது ஓர் அமெரிக்க பல்கலைக்கழகம். இது, அமெரிக்க, ஃப்ரெஞ்ச் மற்றும் பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் அமைந்திருக்கும் கத்தாரின் கல்வி நகரில், பாலைவனத்தின் மத்தியில், கண்கவர் புல்வெளிகளுக்கு மத்தியில் பளபளக்கும் புதிய கட்டடங்களுடன் அமைந்திருக்கிறது.

அல் ஜசீரா தொலைக்காட்சி

பட மூலாதாரம், KARIM JAAFAR/AFP/Getty Images

"கத்தாரின் புதிய தலைமுறையினருக்கு கல்வி பயிற்றுவிப்பதே குறுகிய கால நோக்கமாக இருந்தாலும், அரபு உலகத்தில் கத்தாரை கல்வி நகராக மாற்றுவதுதான் நீண்டகால குறிக்கோள். இதுவும் கத்தாரை சிறப்பானதாக உருமாற்றி, செதுக்கும் ஒரு செயலே" என்கிறார் கம்ராவா.

ஷேக் ஹமாத் தனது நாட்டை பார்க்க விரும்பிய கோணத்திலேயே பெரும்பாலானோர் கத்தாரை பார்க்கின்றனர், அது மிகவும் பாதுகாப்பானது என்று. கத்தாரை ஷேக் ஹமாத் பிரபலமடையச் செய்த முயற்சிகளை வேறுயாரும் மேற்கொண்டதில்லை.

அல் ஜஸீரா

செயற்கைகோள் டிஷ் வைத்திருந்தால்தான், நாட்டில் நடைபெறும் அண்மைத் தகவல்களைப் தெரிந்துக் கொள்ளமுடியும் என்ற நிலையில், அரபு உலகில் அரசிற்கும் மக்களுக்குமான உறவுகளை மாற்றி அமைத்ததில் அல்-ஜஸீராவின் பங்கு மிகவும் முக்கியமானது. செய்திகளை தெரிந்துக் கொள்ள வேறு எந்த வழியுமே இல்லாத நிலையில், இணையம் பரவலான பயன்பாட்டுக்கு வருவதற்குமுன்பே, சமூக ஊடகங்கள் பரவுவதற்கு முன்னதாகவே, டிவிட்டர் வருவதற்கு வெகுகாலத்திற்கு முன்பே மக்களின் அத்தியாவசிய ஊடகமாக மாறிவிட்டது அல் ஜஸீரா. எனவே, மத்திய கிழக்கு முழுவதும், அல் ஜஸீரா பல வழிகளில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, அதிகார சமநிலையை பேணுவதில் சிறப்பான பங்களிப்பை வழங்கியது என்கிறார் காம்ரவா.

செயற்கைகோள் சேனலான அல் ஜஸீரா, மாற்றத்திற்கான முதன்மையான காரணம் என்றால், கல்வி நகரமும், உயர்தரம் கொண்ட சர்வதேச விமான நிறுவனமும் முன்னேற்றத்தில் கத்தாருக்கு பங்களித்தன. கத்தார் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகங்களை அமைப்பது, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது என பலதுறைகளில் தடம் பதித்தது. 2022 ஆம் ஆண்டு உலக கால்பந்துப் போட்டியை நடத்தும் உரிமையையும் கத்தார் பெற்றிருக்கிறது. இது மிகப்பெரிய சாதனைதான். ஆனால் உலகில் ஒரு சிறிய நாடு இவ்வளவு அதிகமான செலவுகளை எப்படி ஈடுகட்டுகிறது?

கலிஃபா சர்வதேச விளையாட்டு அரங்கம், தோஹா

பட மூலாதாரம், KARIM JAAFAR/AFP/Getty Images

படக்குறிப்பு,

கலிஃபா சர்வதேச விளையாட்டு அரங்கம், தோஹா

கம்ராவா: அளப்பறிய திரவநிலை இயற்கை எரிவாயுவை தன்னகத்தே கொண்டிருப்பதால், பொருளாதார வளமும் கத்தாருக்கு இயல்பாகவே வசப்பட்டது. மேலும் அண்மை ஆண்டுகளில், இறையாண்மை நிதியத்தின் மூலம் வெளிநாடுகளில் பலவிதங்களில் திறமையாக செய்யப்படும் முதலீடுகளாலும் வருவாய் உயர்கிறது.

லண்டனில் மிக உயரமான கட்டடங்களில் முதலீடுகள் செய்யப்பட்டன. ஆனால் இதுபோன்ற முதலீட்டு உத்திகள் உலகின் கவனத்தை ஈர்ப்பதில் பெரியளவிலான வெற்றியைப் பெறவில்லை என்று மெஹ்ரன் கம்ராவா கூறுகிறார்.

கத்தாரின் ஜொலிக்கும் கோபுரங்கள், அழகுபடுத்தப்பட்ட புல்வெளிகளை நெருங்கினால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சுரண்டப்பட்டு, வஞ்சிக்கப்பட்டிருப்பது தெரியும் என்று மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம் தெரிவிக்கின்றன. மேலும், உலகக் கோப்பை போட்டியை கத்தாரில் நடத்துவதற்கான வாக்கு சேகரிப்பில் முறைகேடுகள் நடைபெற்றதான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.

கத்தாரின் உண்மை முகம் எது? - அடுத்த பாகத்தில் படியுங்கள்.

குவைத் கூட்டம் கத்தார் பிரச்சினைக்கு தீர்வைத் தருமா?

காணொளிக் குறிப்பு,

குவைத் கூட்டம் கத்தார் பிரச்சினைக்கு தீர்வைத் தருமா?

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :