“அழியப்போகிறது சிரியா!” 2,700 ஆண்டுகளுக்கு முந்தைய ஆருடம்

  • ஆண்ட்ரே பெர்னார்டோ
  • பிபிசி நிருபர், ரியோ டி ஜெனிரோவிலிருந்து

கி.மு. 687 ஆண்டுவாக்கில், யூதர்களின் தீர்க்கதரிசி ஏசாயா தனது புத்தகத்தை எழுதத் துவங்கியபோது, 28 நூற்றாண்டுகளுக்குப் பிறகு சமூக ஊடகங்களின் தனது புத்தகம் விவாதப்பொருளாக இருக்கும் என்று அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தாக்குதல்

பட மூலாதாரம், AFP

அண்மையில் சில நாட்களாக, பிரேசில் நாட்டு சமூக ஊடகங்களில் வைரலாகும் சில பதிவுகளின்படி, தீர்க்கதரிசி ஏசாயா கி.மு. ஏழாம் நூற்றாண்டில் இஸ்ரேல் தொடர்பான ஒரு முக்கியமான தீர்க்கதரிசனத்தை வெளியிட்டார். அதில் தற்போது சிரியா உள்நாட்டு யுத்தத்தின் பிடியில் இருக்கும் என்று கூறப்பட்டது.

சரியான வார்த்தைகளின் சொல்ல வேண்டுமென்றால், சிரியாவின் டமாஸ்கஸ் நகரின் தற்போதையை நிலை பற்றி அன்றே அவர் ஆரூடம் சொன்னார்.

நபி ஏசாயா தீர்க்கதரிசனத்தை பற்றிய செய்திகள்

பட மூலாதாரம், John Brashear @Twitter

பைபிளின் பழைய ஏற்பாட்டின் 17-ம் அதிகாரத்தின் முதல் வசனங்களில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது, "டமாஸ்கஸ் ஒரு நகரமாக இருக்காது, அது குப்பைகளின் குவியலாக மாற்றப்படும்".

சமூக ஊடகங்களில் பதியப்படும் பதிவுகளில் ஜெர்மியா என்ற வானியலாளர் கூறியதாக சொல்லப்படும் கருத்துகளும் பதிவிடப்படுகின்றன. அதன்படி, "டமாஸ்கஸ் சக்தியற்று போய்விடும். அதை காப்பாற்ற முயற்சிப்பவர்கள் அச்சத்துடன் இருப்பார்கள். ஒரு பெண்ணின் பிரசவ வேதனை எப்படி உச்சகட்ட வேதனையாக இருக்குமோ அதுபோன்ற வலியுடன் வேதனையுடன் அவர்கள் இருப்பார்கள்."

தற்போது நடப்பவை பற்றி, ஏசாயா மற்றும் ஜெர்மியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கூறியிருக்க சாத்தியம் உண்டா? அல்லது புனித நூல்களைப் பற்றித் தெரியாதவர்கள், மதத்தின் பெயரில் வன்முறைகளை நியாயப்படுத்த இந்த நூல்களை தவறாக வழிநடத்துகிறார்களா?

ரியோ டி ஜெனிரோவின் பாண்டிஃபித்தே கத்தோலிக்க பல்கலைக்கழக இறையியல் பேராசிரியர் ஃபெர் இஜிடோரோ மொஜோரோலே இவ்வாறு கூறுகிறார்: "சிரியாவின் தற்போதைய நிலைமை, இனப்படுகொலைகள் நிகழும் என்று ஏசாயா தனது தீர்க்கதரிசனத்தில் கூறியதற்கு ஒத்ததாகவே இருக்கிறது. இதுதான் கடவுளின் சித்தமாக இருப்பதால், இந்த சூழ்நிலையை மாற்றுவதற்கு எதையும் செய்ய முடியாது என்று நான் நம்புகிறேன்.

இந்தக் கருத்தை மறுக்கிறார் சாவோ பாலோவின் ஏஞ்சலிகன் மறைமாவட்ட புனித டிரினிட்டி கத்தோலிக்க திருச்சபையின் அருட்தந்தை ஆர்தர் நாசிமெண்டோ. "கடவுளுடைய தோள்களில் நமது பொறுப்புகளை சுமத்த முடியாது, சிரியாவில் நடைபெறும் கொடுமைகளை முடிவுக்கு கொண்டுவர நாமும், சர்வதேச சமுதாயமும் இணைந்தே தீர்வை கண்டறியவேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

புனித நூல்களில் எழுதப்பட்ட விஷயங்களின் பொருளை புரிந்துகொள்ள எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்லும் அவர், "வரலாற்றின் அடிப்படையிலேயே பைபிள் எழுதப்பட்டது, பைபிளில் எழுதப்பட்ட வார்த்தைகளை அவற்றின் அர்த்தத்தை வேறு அடிப்படையிலோ அல்லது நமக்கு ஏற்றவாறு திரித்துக் கூறுவதோ மிகவும் ஆபத்தானது" என்று எச்சரிக்கை விடுக்கிறார் அவர்.

அவ்வாறு செய்யும்போது, இந்த புனித நூல்களின் அடிப்படையில் இனவாதப் பாகுபாடு முதல், ஒருபால் உறவுக்கு எதிரான பாகுபாடு வரை எல்லாவற்றையும் சரியானது என்றும் நிரூபிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஆர்தர் நசிமெண்டோ கூறுகிறார்.

நபி

தீர்க்கதரிசியின் பங்கு

மக்கள் உண்மையில் நம்புவது போல எதிர்காலத்தை கணித்து சொல்பவரோ, அல்லது எதிர்காலத்தை பார்க்கக்கூடியவரோ தீர்க்கதரிசி இல்லை. தீர்க்கதரிசி என்பவர் தற்போதைய நிலைமைக்கு சவால் விடக்கூடியவர்.

அந்தக் காலத்தில், அரசியல் ஊழல், சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், தொழிலாளர்கள் சுரண்டப்படுதல் போன்ற பல தவறுகளை ஏசாயா கண்டித்தார். "டமாஸ்கஸின் அழிவைப் பற்றி ஏசாயா குறிப்பிடுவதாக கூறப்படுவது, கி.மு. 732இல் நிகழ்ந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது" என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்,

காணொளிக் குறிப்பு, தெரு கிரிக்கெட் ரசிகரா நீங்கள்? உங்களை இந்த காணொளி கவரலாம்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரேல் நாடு (இஃப்ராயிம்) மற்றும் ஆரம் நாடு (டமாஸ்கஸ்) அசீரியாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றாக போரிட்டன. 21ஆம் நூற்றாண்டில் சிரியாவின் பேரழிவைப் பற்றி 17ஆம் அதிகாரத்தில் கூறப்படவில்லை. மாறாக, அப்போதைய பேரழிவைப் பற்றித்தான் தீர்க்கதரிசி ஏசாயா தெரிவித்தார், அதுவும் அந்தக் காலத்தில் போரில் கூட்டாக இணைந்து போரிட்ட கூட்டணியின் தோல்வி பற்றி பேசினார்.

டமாஸ்கஸ் பேரழிவு பற்றி கவலை தெரிவித்த அவர், பத்து ஆண்டுகளுக்கு பிறகு அசீரியா ராணுவம், இஸ்ரேல் தலைநகர் சமாரியாவை (இந்த புராதன நகரம் கி.மு. 8 - 9ஆம் நூற்றாண்டில் இஸ்ரேல் தலைநகராக இருந்தது) கைப்பற்றியது.

பிரேசிலில் உள்ள இவெஞ்சிலிக்கல் லூதெரன் தேவாலயத் தலைவர் பாஸ்டர் எகோன் கோப்பரெக் இவ்வாறு கூறுகிறார், "தீர்க்கதரிசியான ஏசாயாவின் கருத்தையும், இன்று சிரியாவில் நிகழ்வதையும் ஒப்பிட்டு பார்ப்பது என்பது மதத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதற்கு சமமானது" என்று கூறுகிறார். அடிப்படைவாதிகள் இதுபோன்ற கருத்துக்களை பரப்பி கிறித்துவர்களிடையே பீதியை, அச்சத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்."

இனப்படுகொலை பற்றி வதந்திகள்

பைபிளில் கூறப்பட்டுள்ளவற்றுடன், ராணுவ மோதல்களை ஒப்பிட்டு வதந்திகளை பரப்புவது மெய்நிகர் உலகில் புதிதா என்ன? படுகொலை சம்பவங்களை பைபிளில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுவதாக ஒப்பிட்டு கூறும் புதிய போக்கு வைரலாவதும் சகஜமே.

தற்போது பிரேசிலில் சர்ச்சைகளை கிளப்பியிருக்கும் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தின் ஆங்கில பதிப்பு 2013 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் சர்ச்சையை கிளப்பியது.

லூக்கா சுவிசேஷத்தின் 23-ம் அதிகாரத்தின் 28-ம் வசனத்தையும் இதுபோன்ற விடயங்களுக்கு மற்றொரு உதாரணமாக கூறலாம்.

பைபிளின் புதிய ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ள இந்த வசனத்தில் அவர், அழுது கொண்டு தன்னை பின் தொடரும் பெண்களை பார்த்து இவ்வாறு சொல்கிறார், "ஜெருசலேமின் பெண்களே எனக்காக அழாதீர்கள், ஆனால் உங்களுடைய பிள்ளைகளை நினைத்து அழுங்கள்."

காணொளிக் குறிப்பு, மரணத்தின் பிடியில் சிரியா மக்கள்

இயேசு கூறுகிறார், "ஒருபோதும் குழந்தையை பிரசவிக்காதவர்கள், தங்கள் மார்பில் இருந்து குழந்தைகளுக்கு பால் கொடுக்காத பெண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்."

பிரேசில் கிறித்துவத் திருச்சபைகளின் தேசிய கவுன்சில் என்ற அமைப்பின் தலைவர் அருட்தந்தை ரோமி மார்சியோ பேன்கே சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு யுத்தம் தொடர்பாக தீர்க்கதரிசி ஏசாயா கூறுவதாக பரலாகும் செய்திகளை குறித்து இவ்வாறு சொல்கிறார்-

"சுவிசேஷத்தில் கூறப்பட்டபடி, யூதப் படுகொலை பற்றிய கணிப்புக்கு இயேசு பொறுப்பு என்று சொல்வது சரியல்ல. அது எந்தவொரு தனிநபரோ அல்லது குழுவோ இந்த படுகொலைகளுக்கு பொறுப்பில்லை என்று கூறுவதற்கு சமமானது. இயேசு ஜெருசலேமைப் பற்றி கூறியது தேவாலயத்தை பற்றி மட்டுமே. அது ஒரு மதம் தொடர்பான மையம் மட்டுமல்ல, அரசியல் மற்றும் பொருளாதார மையமாகவும் இருந்தது."

2011இல் இருந்து சிரியாவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் 4.7 மில்லியன் கொல்லப்பட்டுள்ளனர். 5 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இதை எதனுடன் ஒப்பிடுவது?

அருட்தந்தை ஆர்தர் நாசிமெண்டோ இவ்வாறு முத்தாய்ப்பாக கூறுகிறார்: "பைபிளை ஒரு மத நூலாக மட்டுமே படிக்க வேண்டும், அதை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கற்பனையிலோ அல்லது தவறான கால வரிசையிலோ பார்க்கக்கூடாது, அதன் அர்த்தங்களை திரித்து புரிந்து கொள்ளக்கூடாது. சிரியா நாட்டு மக்களுக்கு எதிரான கொடுமை மற்றும் வன்முறை செய்பவர்களை விமர்சிக்க வேண்டும், அந்த மக்களை எப்படிப் பாதுகாக்கலாம் என்று ஆலோசிக்க வேண்டும்."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: