குரங்கணி காட்டுத்தீ: மேலும் ஒருவர் பலி

குரங்கணி

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கி அறுபது சதவீத தீக்காயங்களுடன் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சதீஷ் குமார்(29) என்பவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ்குமாரின் இறப்பால், குரங்கணி தீவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச்11ம் தேதி மலையேற்றப் பயிற்சிக்காக சென்னை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 36 நபர்கள் தீவிபத்தில் சிக்கினர். அனைவரும் மீட்கப்பட்டாலும், ஒன்பது நபர்கள் மட்டுமே எந்தவித தீக்காயங்களும் இல்லாமல் தப்பினர்.

பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை எடுத்துவந்த 17 நபர்கள் இறந்துவிட்ட நிலையில் தமிழகம் முழுவதும் மலையேற்றம் செல்வதற்கு கடும் கட்டுபாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்கப்படுகிறது.

சென்னை ட்ரெக்கிங் கிளப் என்ற நிறுவனத்தின் மூலம் சென்னையில் இருந்து மலைஏற்றத்திற்கு இளைஞர்கள் வந்துள்ளனர் என்று தெரியவந்ததும், அந்த கிளப்பின் நிறுவனர் பீட்டர் என்பவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

ஈரோட்டைச் சேர்ந்த மலைஏற்றபயிற்சி நிறுவன ஊழியர்களிடம், மலையேற்றத்திற்கு செல்வதற்கு அனுமதி பெறப்பட்டதா என்றும் விசாரணை நடந்துவருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: