இலங்கை வன்முறை: அவசர நிலை பிரகடனம் ரத்து
இந்த மாதத் தொடக்கத்தில் இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகளை அடுத்து அவசரகால நிலையை பிரகடனம் செய்த இலங்கை அரசு, தற்போது அதனை ரத்து செய்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் தொழிலகங்களும், மசூதிகளும் சேதமடைந்துள்ளன.
வன்முறைகள் பரவாமல் இருக்க அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதுடன், சமூக ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
பெளத்த மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் இலங்கையில் 2012இல் இருந்து கடும்போக்கு பெளத்த மதக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் அதிகரித்துள்ளன.
முஸ்லிம்கள், பிற மத்ததினரை இஸ்லாமிற்கு மாற்றும் முயற்சிகளில் ஈடுபடுவதாகவும், பௌத்த தொல்பொருள் தளங்களை அழிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அவசரகால நிலைமை அமலில் இருந்தபோது, அவசியம் எனக் கருதினால் சந்தேக நபர்களை தடுத்துநிறுத்தும் அதிகாரம் இலங்கை அதிகாரிகளுக்கு இருந்தது.
கண்டி பிரதேசத்திற்கு நூற்றுக்கணக்கான துருப்புக்கள் அனுப்பப்பட்டன. அரசாங்கத்தின் ஊரடங்கு உத்தரவை சில குழுக்கள் மீறியதை அடுத்து, கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
கண்டியில் சமீபத்தில் நடந்த இன ரீதியான கலவரங்களைத் தொடர்ந்து போலிஸ் கமாண்டோக்கள் தெருக்களில் ரோந்து சென்றனர்.
ஞாயிறன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, பொது பாதுகாப்பு குறித்து மதிப்பீடு செய்ததை அடுத்து அவசர நிலை நீக்கப்படுவதாக அறிவித்தார்.
பேஸ்புக் உட்பட சமூக ஊடக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் இந்த வார தொடக்கத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது.
ஏழு ஆண்டுகளில் பிறகு அண்மையில் இலங்கையில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது
மூன்று தசாப்தங்களாக தொடர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டுப் போர் 2009 ம் ஆண்டு முடிவடைந்தது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்