“ஜான்சன் அண்ட் ஜான்சனின் குழந்தைகள் பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் துகள்கள்”
கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
குழந்தைகள் பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் துகள்கள்
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான முகப்பவுடர்களில் புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் இருப்பது குறைந்தது 1971 முதலே தெரியும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்ட பின் அதன் பங்கு மதிப்புகள் 10% அளவுக்கு சரிந்துள்ளன.
புற்றுநோய் உண்டானதாக அந்நிறுவனம் மீது ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராய்ட்டர்ஸ் செய்தி ஒருதலைப்பட்சமானது என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கூறியுள்ளது.
யேமனில் சண்டை நிறுத்தம் தொடருமா?
உள்நாட்டுப் போர் ஏற்படுத்திய பஞ்சத்தைப் போக்க, ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹுடேடா துறைமுக நகரில் அரசு மற்றும் கிளர்ச்சியாளர்களிடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிறு ஆயுதக் குழுக்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் போர் நிறுத்தம் தொடருமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
வியாழன்று ஸ்வீடனில் நடந்த, இருதரப்பு பேச்சுவார்தைக்குப் பிறகு, உணவுப் பொருட்கள் மக்களைச் சென்று சேரும் நோக்கில் இந்த சண்டை நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை ஐ.நாவால் மத்தியஸ்தம் செய்யப்பட்டது.
தஞ்சம் கோரி வந்த சிறுமி அமெரிக்காவில் மரணம்
அமெரிக்க எல்லை காவல் படையினரின் காவலில் இருந்தபோது, 7 வயது சிறுமி மரணமடைந்தது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
குவாட்டமாலாவை சேர்ந்த சிறுமி ஜகெலின் கால் மாகுயின், தனது தந்தையோடு சேர்ந்து கடந்த வாரம் அமெரிக்க-மெக்சிக எல்லையை கடந்த பின்னர் தடுத்து வைக்கப்பட்டார்.
நீர்சத்து குறைந்து விட்டதால் அந்த சிறுமி இறந்து விட்டதாக முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தடுப்புக்காவலில் இருந்தபோது அவர்களுக்கு உணவும், நீரும் கொடுக்கப்பட்டது என்று எல்லையிலுள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர்.
யுனிசெஃப் மீதான தடை ரத்து
ஐ.நாவின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப் தீவிரவாதக் குழுவுக்கு உளவு வேலை பார்ப்பதாக குற்றம்சாட்டி அந்த அமைப்பு நைஜீரியாவின் வடகிழக்கில் செயல்பட விதிக்கப்பட்ட மூன்று மாத தடையை நீக்கியுயுள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
யுனிசெஃப் அதிகாரிகளுடன் நடந்த அவசரப் பேச்சுவார்தைக்குப் பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்கோ ஹராம் தீவிரவாத அமைப்பின் ஊடுருவலால் வடகிழக்கு நைஜீரியாவில் இருந்து குடிபெயர்ந்த பல லட்சம் மக்கள் உதவிகளை எதிர்நோக்கியுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்