இரான் பதற்றம்: செளதிக்கு பில்லியன் கணக்கில் ஆயுதங்கள், படை வீரர்கள் - என்ன நடக்கிறது? மற்றும் பிற செய்திகள்
செளதிக்கு பில்லியன் கணக்கில் ஆயுதங்கள், படை வீரர்கள்
இரான் பதற்றம் காரணமாக 8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை செளதிக்கு விற்க அனுமதி தந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இவ்வாறாக ஆயுதம் விற்க அமெரிக்க காங்கிரஸின் அனுமதியை பெற வேண்டும்.
ஆனால், இரான் விவகாரத்தை காரணம் காட்டி அனுமதி வாங்கப்படாமல் ஆயுதங்கள் விற்கப்படுகிறது. நேரடியாக ட்ரம்பே இதற்கான அனுமதியை வழங்கி உள்ளார். இதற்கு சில ஜனநாயகவாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
அதுபோல, 1500 படை வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்ப இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் கூறி உள்ளார். மேலும் அவர் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற பாதுகாப்பு ஆயுதங்கள் அனுப்படும் என கூறி உள்ளார். ஆனால், இவை குறைந்த அளவிலான படைகளே என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி உள்ளார்.
எண்ணெய் கப்பலை தாக்கியதாக அமெரிக்கா உயரதிகாரிகள் நேரடியாக இரானை குற்றஞ்சாட்டி வருகின்றனர். மர்மமான குண்டுகள் வெடித்ததில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் சேதமாகின.
யோகா வகுப்பில் ஒன்றாக கலந்துகொண்ட ஆண்கள், பெண்கள் - இரானில் 30 பேர் கைது
இரானில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து யோகாசனம் செய்ததால் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளது அந்நாட்டு சமூக ஊடகங்களில் விவாதமாகியுள்ளது. இரானின் வடக்குப் பகுதியில் உள்ள கோர்கான் நகரில் இந்த கைது நடந்துள்ளது.
கைதானவர்களில் யோகா பயிற்றுநரும் அடக்கம் என்று மசூத் சுலைமானி எனும் உள்ளூர் நீதித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அந்தப் பயிற்சியாளர் வகுப்புகள் நடத்த அனுமதி பெறவில்லை என்றும், இன்ஸ்ட்டாகிராமில் தம் யோகா வகுப்புகள் குறித்து விளம்பரம் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
விரிவாகப் படிக்க: ஆண்கள், பெண்கள் ஒன்றாக யோகா - இரானில் 30 பேர் கைது
தேர்தல் முடிவுகள் 2019: யாருக்கு எத்தனை இடங்கள்?
இந்திய மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று மே மாதம் 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி முடிவுகள் வெளியாக தொடங்கின. 24ம் தேதி அனைத்து இந்திய மக்களவைத் தொகுதிகளின் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. கட்சிகள் வரியாக வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை இதோ:
தமிழிசையை விட ஹெச்.ராஜாவுக்கு கூடுதல் வாக்குகள்
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.இந்நிலையில் தோல்வியடைந்த பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியன எந்த அளவுக்கு வாக்குகள் பெற்றிருக்கின்றன, நோட்டாவுக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்துள்ளன என்பதை தற்போது பார்ப்போம் .
விரிவாகப் படிக்க: தமிழிசையைவிட ஹெச்.ராஜாவுக்கு கூடுதல் வாக்குகள் - 5 முக்கிய தகவல்கள்
பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகுகிறார் தெரீசா மே
பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து ஜூன் 7ஆம் தேதியில் இருந்து விலகப்போவதாக தெரீசா மே கூறியுள்ளார்.
ஜூன் 7ஆம் தேதி கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகியபின், புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார்.
2016ம் ஆண்டு பிரிட்டன் மக்களிடம் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவை செயல்படுத்துவதற்கு "தான் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக" டவுணிங் ஸ்டீட் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியான உணர்ச்சிகரமான அறிவிப்பில் தெரீசா மே கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்