ரஃபேல் ஒப்பந்தத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் உள்ளே வந்த கதை
- பால் கேஸ்னியர்
- பிரெஞ்சு பத்திரிகையாளர்
(ரஃபேல் விவகாரம் தொடர்பான மறு ஆய்வு வழக்கில் இன்று (வியாழக்கிழமை) உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், அதுதொடர்பான கட்டுரையை மறுபிரசுரம் செய்கிறோம்.)
பிரெஞ்சு ஊடகம் ஒன்றிடம் அளித்த பேட்டியில் ஃபிரான்ஸின் முன்னாள் அதிபர் ஃபிரான்சுவா ஒலாந்த், இந்திய அரசு பரிந்துரை செய்ததன் பேரில்தான், ரஃபேல் விமானங்களைத் தயாரிக்க அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பிரெஞ்சு நிறுவனமான டஸ்ஸோ ஒப்பந்தம் மேற்கொண்டது என்று கூறியுள்ளார்.
ஃபிரான்சுவா ஒலாந்த் பதவிக்காலத்தின்போது 36 ரஃபேல் ரக ஜெட் போர் விமானங்களை வாங்க இந்தியா மற்றும் பிரான்ஸ் அரசுகள் ஒப்பந்தம் மேற்கொண்டதில், அவற்றைத் தயாரிக்கும் பிரெஞ்சு நிறுவனத்துக்கு இந்தியக் கூட்டாளியாக ரிலையன்ஸ் தேர்வு செய்யப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக இந்திய எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
ஒலாந்த் உடன் சேர்ந்து வாழும் பிரெஞ்சு திரைப்பட நடிகை ஜூலி காயே நடிக்கும் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கவும் ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
பத்து மில்லியன் யூரோ செலவில் தயாரிக்கப்பட்ட , ''ரைட் ஆன் தி டாப்' எனும் அந்தப் படத்துக்கு ரிலையன்ஸ் 1.6 மில்லியன் யூரோ நிதி அளித்துள்ளது.
அதே சமயத்தில்தான் இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ரஃபேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த இரண்டும் தற்செயலாக ஒரே சமயத்தில் நிகழ்ந்தன என்று ஒலாந்த் மற்றும் ஜூலி ஆகியோர் கூறுவதை ஊடகங்கள் கேள்விக்கு உள்ளாக்குகின்றன.
விசாரணை செய்ய எதிர்க்கட்சிகள் மனு
இந்தப் போர் விமானங்களின் விலை நிர்ணயிக்கப்பட்டது மற்றும் இந்த ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு ஆகியவை குறித்தும் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று இந்திய எதிர்க்கட்சிகள் இந்தியாவின் தலைமை தணிக்கையாளர் அலுவலகத்திடம் (சி.ஏ.ஜி) மனு அளித்துள்ளன.
விமானங்கள் விற்கப்படும் தொகையில் 50% பணத்தை இந்தியாவிலேயே முதலீடு செய்ய வேண்டும் என்று டஸ்ஸோ நிறுவனத்திடம் செய்துள்ள ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் குறிப்பிட்டிருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் அளித்துள்ள மனுவின் மையமாக உள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை வெளிப்படையாக ஆதரிக்கும் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு லாபம் செல்ல வேண்டும் எனும் நோக்கில் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் மோதி மீதும் குற்றம் கூறுகின்றன.
போர் விமானங்களை தயாரிப்பதில் முன் அனுபவம் எதுவும் இல்லாத ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனமும், 36 ரஃபேல் விமானங்கள் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்கப்படும் என்று தனது பிரான்ஸ் பயணத்தின்போது மோதி அறிவித்ததற்கு 12 நாட்களுக்கு முன்புதான், அதாவது 2015-ஆம் ஆண்டு மார்ச் 28 அன்று, நிறுவப்பட்டுள்ளது.
அதே ஆண்டு ஆகஸ்டு 31 அன்று ஜூலி காயே நடிக்கும் படத்தில் ரிலையன்ஸ் முதலீடு செய்வது குறித்த செய்தியை தி இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டுள்ளது.
அதே நாளில்...
ஜனவரி 24, 2016 அன்று அனில் அம்பானி, அப்போது நம்பர் ஒன்' எனப் பெயரிடப்பட்டிருந்த அப்படத்தில் முதலீடு செய்வதாக ஊடகங்களுக்கு செய்தி அறிக்கை வெளியிடும் வரை எல்லாம் சுமூகமாகவே இருந்தது. ஏனென்றால் அதே நாளில்தான் மூன்று நாள் பயணமாக ஒலாந்த் இந்தியா வந்தார்.
மீடியாபார்ட் நிறுவனத்திடம் பேசிய ஃபிரான்சுவா ஒலாந்த் ஜூலி காயே நடிக்கும் படத்தை தயாரிப்பதற்கு அனில் அம்பானியின் நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்து தமக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் ரிலையன்ஸ் குழுமம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்றும் கூறியுள்ளார்.
எகிப்து மற்றும் கத்தாருக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு ரஃபேல் விமானங்களை விற்பதை அந்தப் பயணம் உறுதி செய்தது.
ஜனவரி 25, 2016 அன்று, ரஃபேல் விமானங்களை வாங்க இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் குறித்து ஒலாந்த் முன்னிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1
மீடியாபார்ட் உடனான பேட்டியில், "முதலில் 126 விமானங்கள் வாங்கப்பட இருந்த நிலையில் பின்னர் அதை 36 ஆக இந்தியா குறைத்தது. அதனால்தான் அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு பின் நான் அதில் தலையிட்டேன். பின்னர் அவை பிரான்சிலேயே தயாரிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது," என்று ஒலாந்த் கூறியுள்ளார்.
ஆனால், மாற்றப்பட்ட இந்த புதிய ஒப்பந்தத்தில் டஸ்ஸோ நிறுவனம் தன் கூட்டாளியான ரிலையன்ஸ் நிறுவனத்துடன் லாபத்தை பகிர்ந்துகொள்ளும் சரத்து சேர்க்கப்பட்டதுதான் இன்று பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
'இந்திய அரசுதான் பரிந்துரை செய்தது'
"அம்பானியுடன் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய டஸ்ஸோ நிறுவனத்துக்கு இந்திய அரசுதான் ரிலையன்ஸ் குழுமத்தை பரிந்துரை செய்தது. அதனால் ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் எனக்கு ஆதாயம் எதுவும் இருப்பதாகக் கூறுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. ஜூலி காயே நடிக்கும் படத்துக்கு இந்த விவகாரத்துடன் தொடர்பு இருக்கும் என்று நான் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை," என்று ஃபிரான்சுவா ஒலாந்த் கூறியுள்ளார்.
இவர் கூறியுள்ளது, டஸ்ஸோ தாமாகவே ரிலையன்ஸ் நிறுவனத்தை தொழில் கூட்டு வைக்க தேர்வு செய்தது என்று இந்திய அரசு தெரிவித்துள்ள தகவலுக்கு முரணாக உள்ளது.
ஆகஸ்ட் மாதம் ரிலையன்ஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு இந்த தொழில் கூட்டு உண்டானதில் எந்தப் பங்கும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2
நடிகை ஜூலி காயே மீடியாபார்ட் நிறுவனத்துக்கு தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். " மை ஃபேமிலி தயாரிப்பு நிறுவனம், எனக்கு பங்கு இருக்கும் விஸ்வைர் நிறுவனம் மூலம் இந்த படத் தயாரிப்புக்கு ரிலையன்ஸ் நிதியளிக்க வேண்டும் என்று அணுகியது. அதைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பில் முதலீடு செய்யும் பிற நிறுவனங்களைப் போலவே ரிலையன்ஸ் 10% அளவுக்கு தயாரிப்புச் செலவை அளிக்க ஒப்புக்கொண்டது," என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் தயாரிப்பாளர் எலிசா சௌசாவை மீடியாபார்ட் தொடர்புகொண்டபோது பதில் எதுவும் அளிக்கவில்லை. எனினும் மை ஃபேமிலி நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், அனில் அம்பானியின் நிறுவனம் திரைப்படத்தின் தயாரிப்பில் முதலீடு செய்தது அனைத்தும் ஜூலி காயேவின் தனிப்பட்ட முயற்சிகளால்தான் என்று கூறியுள்ளது.
திரைப்படம் தயாரிக்க ரிலையன்ஸ் முதலீடு
ரிலையன்ஸ் நிறுவனம் நேரடியாக முதலீடு செய்யாமல் விஸ்வைர் கேபிட்டல் நிறுவனம் மூலம் நிதி வழங்கியுள்ளது. அனில் அம்பானியுடன் தனிப்பட்ட வகையில் நட்பு கொண்டுள்ள விஸ்வைர் நிறுவனத்தின் நிறுவனர் ரவி விஸ்வநாதன், ரிலையன்ஸ் கேபிட்டல் இந்தியாவில் இருக்கும் தங்கள் வைன் தொழில் உள்பட பலவற்றிலும் முதலீடு செய்துள்ளது. அவற்றில் ஒன்றுதான் திரைப்படங்கள் தயாரிக்க நிதி அளிப்பது என்கிறார்.
பிரான்ஸ் வங்கி ஒன்றில் முன்னர் பணியாற்றிய, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரவி விஸ்வநாதன், 25 ஆண்டுகளுக்கும் முன்பு மேத்தியூ பிகாசெ எனும் வங்கி நிர்வாகி ஒருவர் மூலம் அனில் அம்பானிக்கு அறிமுகமானார்.
பெரும்பாலும் பிரெஞ்சு திரைப்படங்களை வெளியிடுவதில் ஈடுபட்டுள்ள விஸ்வைர் நிறுவனம் எப்போதாவதுதான் திரைப்படங்களைத் தயாரிப்பதிலும் முதலீடு செய்கிறது.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இமய மலைக்கு தொடர்பு இருப்பதால் ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தை அணுகியதாக ரவி விஸ்வநாதன் கூறுகிறார். ஆனால், இந்தியாவில் திரை அரங்குகளில் வெளியிடப்படாத இந்தப் படத்தில் ரிலையன்ஸ் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இதற்கு ரிலையன்ஸ் இதுவரை பதில் அளிக்கவில்லை.
இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானியை டஸ்ஸோ நிறுவனத்திடமும் ஜூலி காயேவிடமும் தாம் அறிமுகம் செய்து வைக்கத் தேவையில்லை என்கிறார் ரவி.
நவம்பர் 2016இல் பாதுகாப்பு துறை வட்டாரங்களை வைத்து இண்டெலிஜன்ஸ் ஆன்லைன் செய்தி இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், ரிலையன்ஸ் நிறுவனம் காயே நடிக்கும் படத்தில் முதலீடு செய்ததில் அம்பானி உடன் ரவி கொண்ட தொடர்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்
இந்திய எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள கேள்விகளில் இன்னொரு முக்கியமானது, முன்னர் 126 ரஃபேல் விமானங்களை வாங்க பிரான்ஸ் உடன் இந்தியா மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தை 2014இல் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோதி அரசு ரத்து செய்ததுதான்.
முந்தைய ஒப்பந்தத்தின்படி 126 ரஃபேல் ஜெட் போர் விமானங்களில், புதிதாக தயாரிக்கப்படவேண்டிய 108 விமானங்களை தயாரிப்பதற்காக, டஸ்ஸோ நிறுவனத்தின் இந்தியக் கூட்டாளியாக இந்திய அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இருக்கும் என்றும் அவற்றில் 70% விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2015 ஏப்ரல் 10 அன்று, 36 ரஃபேல் விமானங்கள் 7.5 பில்லியன் யூரோவுக்கு வாங்கப்படும் என்று மோதி அறிவித்தார். புதிய ஒப்பந்தத்தை அறிவிக்கும்போது டஸ்ஸோ நிறுவனத்தின் போட்டியாளராக ஏலம் கோரிய நிறுவனங்கள் பற்றி எதுவும் கூறப்படாதது குறித்து கேள்வி எழுப்பிய இந்திய எதிர்க்கட்சிகள், ஒரு விமானத்தின் விலை 300% அதிகரித்துள்ளது குறித்தும் விமர்சித்தன. பழைய ஒப்பந்தம் ரத்தானது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கும் பேரிடியாக இருந்தது.
ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனம் மோதியின் அறிவிப்புக்கு 12 நாட்கள் முன்னதாக நிறுவப்பட்டது என்றால், இன்னொரு கிளை நிறுவனமான ரிலையன்ஸ் ஏரொஸட் ரக்சர் , இதற்கு 14 நாட்கள் கழித்து நிறுவப்பட்டது.
மோதியின் ஆதரவாளரான அனில் அம்பானி 2016இல் மோதியின் பிறந்த நாளன்று அவரை தலைவர்களுக்கெல்லாம் தலைவர் என்றார்.
செப்டம்பர் 2016இல் அப்போதைய பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஜீன் லே ட்யரைன், அப்போதைய இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கரை சந்தித்து ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தின் சரத்துகளை உறுதி செய்தார்.
சில மாதங்களிலேயே 2017 பிப்ரவரியில், பாதுகாப்பு அமைச்சக கூட்டம் ஒன்றுக்குப் பிறகு ஒலாந்த் அனில் அம்பானியை பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சந்தித்தார்.
ஆட்சி மாற்றம்
பின்னர் பிரான்சில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எம்மானுவேல் மக்ரோங் அதிபரானார். அவரது அரசின் பாதுகாப்பு அமைச்சராக புதிதாக பொறுப்பேற்ற புளோரன்ஸ் பார்லி, டஸ்ஸோ - ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட் கூட்டு நிறுவனத்தின் அம்பானி ஏரோஸ்பேஸ் பூங்காவை நாக்பூரில் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ரஃபேல் தயாரிக்க தேவையான பாகங்களை உற்பத்தி செய்ய 100 மில்லியன் யூரோ முதலீடு செய்யப்படும் என்று அந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் ஒட்டுமொத்த மதிப்பில் இது மிகவும் சிறிய தொகைதான். எனினும் இந்த ஒப்பந்தத்தை டஸ்ஸோ செயல்படுத்துவதில் பெரும் அபாயத்தை கடந்தாக வேண்டும். காரணம், ராணுவ விமானங்கள் எதையும் தயாரிப்பதில் முன் அனுபவம் இல்லாத ஒரு கூட்டாளி நிறுவனத்துடன் இணைந்து ரஃபேல் ஜெட் போர் விமானங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்கின்றனர் பிரெஞ்சு பாதுகாப்பு நிபுணர்கள்.
ஆனால், டஸ்ஸோ ரிலையன்ஸுக்கு அளிக்கும் பங்குத் தொகையோ மாபெரும் தொகை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்