'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்

ப.சிதம்பரம்

பட மூலாதாரம், MONEY SHARMA

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விவகாரத்தில் ப. சிதம்பரம் கைதுசெய்யப்பட்டிருப்பது ஒரு அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார் தி இந்து குழுமத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான என். ராம். இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் என்கிறார் அவர். பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனுக்கு அளித்த பேட்டியிலிருந்து:

கே. முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கைதுசெய்யப்பட்டிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?

ப. இது ஓர் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. அவர் மீது ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்படவில்லை. வேறொரு கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட இந்திராணி முகர்ஜி என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் சிதம்பரம் இதில் தொடர்புபடுத்தப்படுகிறார்.

இந்த விவகாரத்தில் மத்தியப் புலனாய்வுத் துறை முழுக்க முழுக்க தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது. அதுவும் சிதம்பரத்தை கைதுசெய்த விதம் மிக மோசமாக இருந்தது. உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வழக்கை விசாரிக்கவிருக்கும் நிலையில், இப்படி இரவில் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன?

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

சி.பி.ஐ., அமலாக்கத் துறை போன்ற மத்திய அரசின் அமைப்புகள் இந்த விவகாரத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. வேறு அரசுகளிலும் இதேபோல நடந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இப்போதும் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? இந்த அரசு செய்த மிகப் பெரிய தவறு இது.

கே. சி.பி.ஐ. தேடும் நிலையில் அவர் தானாக முன்வந்து கைதாகி தனது தரப்பை நிரூபித்திருக்கலாமே?

ப. அவருக்கு எதிராக கடுமையான பொய்ப் பிரச்சாரம் நடந்துவந்தது. நீதிமன்றத்தின் முன்பாக அவரது முன் ஜாமீன் மனு நிலுவையில் இருக்கும்போது அவர் எதற்காக கைதாக வேண்டும் அல்லது சரணடைய வேண்டும்? முன் ஜாமீன் மனு விசாரிக்கப்படுவதற்காக அவர், யார் கண்ணிலும் படாமல் விலகியிருந்திருக்கலாம். அதற்காக தலைமறைவு என்பது 'நான்-சென்ஸ்'.

கே. பழிவாங்கும் நோக்கத்தில் கைதுசெய்யப்படுவதாக இருந்தால், காங்கிரஸ் கட்சியில் பல தலைவர்கள் இருக்கிறார்கள். ப. சிதம்பரம் ஏன் குறிவைக்கப்பட வேண்டும்?

ப. ப. சிதம்பரம் காங்கிரசின் சிறந்த தலைவர்களில் ஒருவர். நிதியமைச்சராக இருந்தவர். இதனால், அமைச்சரவையில் பிரதமருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர். தவிர, இவரைக் குறிவைக்க ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அவ்வளவுதான்.

ராம்

கே. இந்த விவகாரத்தால் காங்கிரசிற்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன?

ப. இந்த விவகாரம் அவர்களை ஒருங்கிணைத்திருக்கிறது. அவர்களுக்கு ஓர் அனுதாபம் ஏற்பட்டிருக்கிறது. ராகுல் காந்தி பதவிவிலகியவுடன் தடுமாறிப் போயிருந்த கட்சிக்கு இது ஒரு உத்வேகத்தை அளிக்கும். சிதம்பரத்திற்கு 74 வயதாகிறது. அந்த வயதுள்ள ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா? இந்த விவகாரத்தில் மத்திய அரசு தவறிழைத்துவிட்டது. இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவே செய்யும்.

கே. தமிழ்நாட்டில் தி.மு.கவினர் சமூக வலைதளங்களில் சிதம்பரம் கைதுகுறித்து மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

ப. கீழ் மட்டத்தில் தொண்டர்கள் அவ்வாறு கருதலாம். ஆனால், கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இதில் தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். 2 ஜி வழக்கு விவகாரத்தில் கனிமொழியும் ஆ. ராசாவும் நடத்தப்பட்டவிதம் மிக மோசமானதுதான். ஆனால், அதற்கு சிதம்பரத்தை மட்டும் குற்றம்சாட்ட முடியாது. அதனை வைத்து இந்த விவகாரத்தை அணுக முடியாது.

சிதம்பரம்

பட மூலாதாரம், Getty Images

கே. இந்த விவகாரத்தில் ஊடகங்கள் நடந்துகொண்டவிதம் எப்படி இருந்தது?

ப. பல ஊடகங்கள் அவர் தலைமறைவு எனச் செய்தி வெளியிட்டன. எப்படி அவ்வாறு சொல்ல முடியுமெனத் தெரியவில்லை. ஒன்று, அவர்கள் ஏமாந்து செய்திவெளியிட்டிருக்க வேண்டும். அல்லது அதிகாரிகள் சொல்வதை வெளியிட வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்திருக்கலாம். பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உடனே கைதாவதில்லை. முன் ஜாமீன் கோருவார்கள்; மாதக்கணக்கில் ஆஜராகாமல் இருப்பார்கள். பிறகுதான் சரணடைவார்கள்.

காரணம், நமது நாட்டில் போலீஸ் காவல் என்பது மிக மோசமாக இருக்கிறது. பல சமயங்களில் போலீஸ் காவலில் உடல்நலத்திற்கு ஊறு ஏற்படுகிறது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். இதையெல்லாம் அறிந்திருந்தபோதும் ஊடகங்கள் ஏன் இப்படிச் செயல்பட்டன என்பது தெரியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: