"ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய ஏற்பாடு"
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி - "ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனை செய்ய ஏற்பாடு"
நியாயவிலைக் கடைகளிலும் வெங்காயம் விற்பனை செய்யப்பட உள்ளது என உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
திருவாரூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளார்களுக்கு அவா் அளித்த பேட்டியில், கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலையில் மாற்றம் இருக்கிறது. இதற்குக் காரணம், வெங்காயம் விளையும் இடங்களில் கூடுதலாக மழை பெய்ததும், அதனால் வெங்காயம் அழுகிப் போனதுமே ஆகும். இதனாலேயே வெங்காய விலை கூடுதலாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கூடுதல் மழை பெய்ததால், பெரிய வெங்காய உற்பத்தி பாதிப்படைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
இதேபோல், "தமிழகத்தில் சின்ன வெங்காயம் அதிகம் விளையும் இடங்களில் கூடுதலான மழை பெய்ததால், சின்ன வெங்காய விலையிலும் மாற்றம் இருக்கிறது. ஆனால், வெங்காய விலை பிரச்னையில், தமிழக அரசு எந்தவித நடவடிக்கையுமே எடுக்காதது போல, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்
எப்போதுமே நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெங்காய விலையில் ஏற்றம் இருக்கும். இதற்காக செப்டம்பா் 23-இல் கூட்டுறவுத்துறை அமைச்சருடன் இணைந்து கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் வெங்காய விலையேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டதோடு, பெரிய வியாபாரிகள் 50 டன் அளவிலும், சிறிய வியாபாரிகள் 10 டன் அளவிலும் இருப்பு வைத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது.
Anand Srinivasan Interview on onion price hike
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1
மேலும், நவம்பர் மாதத்தில் விலையேற்றம் அதிகரித்தவுடன் நவம்பா் 4, 6, 8 ஆகிய தேதிகளில் கூட்டம் நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, பண்ணை பசுமைக் கடைகளில் ரூ. 30, 40-க்கு வெங்காயத்தை விற்க முடிவெடுக்கப்பட்டு, இன்றுவரையிலும் ரூ.40-க்கு வெங்காயம் விற்பனை நடைபெற்று வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. தமிழகத்தில் வெங்காயத் தட்டுப்பாட்டைப் போக்க, மத்திய அரசிடம் 1000 மெட்ரிக் டன் கேட்டுள்ளோம். முதல் கட்டமாக டிசம்பா் 12, 13 தேதிகளில் 500 மெட்ரிக் டன் வந்து விடும். அவற்றை மானிய விலையில் நியாயவிலைக் கடைகளில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கென சுமார் 6000 கடைகள் தயார் நிலையில் உள்ளன" என்று அமைச்சர் காமராஜ் கூறியதாக இந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.
தினமலர் - '2000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லுமா செல்லாதா? மத்திய அரசு விளக்கம்'
'புழக்கத்தில் உள்ள, 2,000 ரூபாய் நோட்டு செல்லாத நோட்டாக அறிவிக்கப்படும் என்ற தகவல் குறித்து மக்கள் கவலைப்பட வேண்டாம்' என, மத்திய நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், பா.ஜ.,வைச் சேர்ந்த, நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் கூறுகையில், "புழக்கத்தில் இருந்த, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக, 2016 நவம்பரில் அறிவிக்கப்பட்டது. கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுகளை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுத்து நிறுத்தவும், பொருளாதாரத்தை சீரமைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வரி வருவாய் மற்றும் வேலைவாய்ப்பை பெருக்கவும், டிஜிட்டல் பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும், செல்லாத ரூபாய் நோட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. தற்போது, 2,000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்து, மீண்டும், 1,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. அது போன்ற திட்டம் எதுவும் இல்லை. எனவே, இது குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை" என்று அவர் தெரிவித்ததாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா - 'குடியுரிமை சட்டத் திருத்த மசோதா -அசாம், திரிபுராவில் வன்முறை'
சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா திங்கள்கிழமை நள்ளிரவு மக்களவையில் நிறைவேறியதை தொடர்ந்து நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பதட்டம் குறித்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு வெளியிட்டுள்ளது.
திரிபுராவில் தலைநகர் அகர்தலாவிலும், மற்ற பகுதிகளிலும் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை பகல் 2 மணி முதல், 48 மணி நேரத்துக்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அசாமில் பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அசாம் தலைநகர் கெளஹாத்தியில் சாலைகளில் சில வாகனங்கள் கொளுத்தப்பட்டன. கடைகள் தீக்கரையாக்கப்பட்டன.
இந்த வன்முறையை தொடர்ந்து அசாமில் மாணவர் அமைப்புக்களை சேர்ந்த கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிற செய்திகள்:
- ரோஹிஞ்சா முஸ்லிம்கள்: சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் சான் சூச்சீ - முக்கியத்துவம் என்ன?
- குடியுரிமை சட்டத் திருத்தம்: இந்திய வம்சாவழி தமிழ் அகதிகளின் நிலை என்ன?
- உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க காரணம் என்ன? - ஆனந்த் ஸ்ரீனிவாசன்
- விக்ரமுக்கு ‘சேது’, துருவுக்கு ’ஆதித்ய வர்மா’ - ஒரு செய்தியாளரின் நினைவலைகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: