பால கங்காதர திலகர்: பெண்களும், பிராமணர் அல்லாதோரும் கல்வி கற்பதை திலகர் எதிர்த்தாரா?

  • பரிமளா வி. ராவ்
  • பேராசிரியர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்.
பால கங்காதர திலகர்

பட மூலாதாரம், PIB

படக்குறிப்பு, பால கங்காதர திலகர்

தேசத்தைக் கட்டமைப்பது என்பது பங்கேற்புடன் கூடிய நடைமுறை. பன்முகப்பட்ட பிரிவுகளையும் ஒன்று சேர்த்து வலுவான தேசத்தை உருவாக்குவதற்கான பிணைப்பை ஏற்படுத்த வேண்டும்.

தம் காலத்தில் மகத்தான மகாராஷ்டிர அறிவுஜீவியாக இருந்த மகாதேவ் கோவிந்த் ரானடே (1842-1901) , நான்கு முக்கியமான அம்சங்களின் அடிப்படையில் இந்தியா என்ற தேசம் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். சிறு விவசாயி மற்றும் விவசாயத் தொழிலாளி, மகளிருக்கு அதிகாரம் அளித்தல், அனைவருக்கும் கல்வி மற்றும் தீவிரமான சமூக சீர்திருத்தம் என்பவையே அந்த 4 முக்கிய அம்சங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

அவருடைய நூற்றாண்டை 1942ல் கொண்டாடிய பி.ஆர். அம்பேத்கர், `ரானடே இயல்பான ஒழுக்கநெறிகளைக் கொண்டிருந்தார். உயர் தரத்திலான அறிவுத் திறன் கொண்டவராக இருந்தார். அவர் ஒரு வழக்கறிஞராகவும், உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தவர் மட்டுமல்ல; அவர் முதல்நிலை பொருளாதார நிபுணர், முதல் நிலை வரலாற்றாளர், முதல் நிலை கல்வியாளர், முதல்நிலை தெய்வீக உணர்வாளர்' (பி.ஆர். அம்பேத்கர், 1943/2008, பக்கம் 19) என்று கூறினார். ஆர்ய சமாஜத்தின் நிறுவனர் சுவாமி தயானந்த சரஸ்வதி 1875ல் புனே வந்தபோது, வன்முறை நிகழும் என்று ஒரு சிலர் மிரட்டினர்.

ரானடேவும், ஜோதிராவ் பூலேவும் கம்புகளையும், கற்களையும் கடந்து தயானந்த சரஸ்வதியை புனேவின் தெருக்களில் பத்திரமாக அழைத்துச் சென்றனர். 1880க்குப் பிறகு, மூத்த நீதிபதி என்ற வகையில், கோலாப்பூர் மகாராஜா (1901) போன்றவர்களுக்கு வெளிப்படையாக அவரால் ஆதரவு அளிக்க முடியவில்லை. வரி விலக்கு பெறுவதற்கு இந்திய தேசிய காங்கிரஸ் (1885) அல்லது டெக்கான் சபா நிர்வாகத்தினர் (1896) பேச்சுவார்த்தை நடத்துமாறு அவர் உத்தரவிட்டார். அவர் உள் அரங்கக் கூட்டங்கள் நடத்தினார். கோபால கிருஷ்ண கோகலே, விஷ்ணு மோரேஷ்வர் பிடே, ஆர்.ஜி. பண்டர்கர், கங்காராம் பாவ் மாஷ்கே போன்ற அவருடைய ஆதரவாளர்களும், மற்றவர்களும் அவருடைய சிந்தனைகளை முன்னெடுத்துச் சென்றனர். ரானடேவும் அவருடைய ஆதரவாளர்களும், பாலகங்காதர திலகரின் (1856-1920) தீவிர எதிர்ப்புக்கு ஆளாயினர்.

1881 ஆம் ஆண்டில் பத்திரிகையாளராக தனது தொழிலைத் தொடங்கிய திலகர், மூன்று மாறுபட்ட விஷயங்களில் ஈடுபாடு கொண்டிருந்தார். முதலாவதாக, கார்ல் மார்க்ஸ் சிந்தனைகளால் அவர் ஈர்க்கப்பட்டு, பிரிட்டிஷ் பத்திரிகைகளில் (1 மே 1881) வெளியான அவரது முக்கியமான கட்டுரைகளை மறுபிரசுரம் செய்தார். இரண்டாவதாக, புதிதாக உருவாக்கப்பட்ட தக்காண விவசாயிகள் நிவாரணச் சட்டத்தை அவர் விமர்சித்தார். மகாராஷ்டிராவில் வறுமையில் இருக்கும் சிறு விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போனால், அவர்கள் வைத்திருக்கும் சிறிதளவு நிலத்தை வட்டி தொழில் செய்யும் உள்ளூர் நபர்கள் பறிமுதல் செய்வதையும், அவர்களை கைது செய்வதையும் அந்தச் சட்டம் தடை செய்தது. இதைத்தான் திலகர் எதிர்த்தார். மூன்றாவதாக, சாதி அமைப்பை அவர் ஆதரித்தார் (The Mahratta, 10 July 1881, The Prospects of Hindu Caste).

இந்த மூன்று விஷயங்களுமே அவருடைய வாழ்நாள் முழுக்க அவரது சித்தாந்தங்களின் முக்கிய அம்சங்களாக இருந்தன. எம்.ஜி. ரானடே மற்றும் பிற சீர்திருத்தவாதிகள் 1884ல் பெண்களுக்கான முதலாவது உயர்நிலைப் பள்ளியைத் தொடங்கியபோது, திலகரின் சித்தாந்தத்தில் பெண்ணிய வெறுப்பும் சேர்ந்துவிட்டது. The Mahratta என்பது கார்ப்பரேட் இதழ் கிடையாது; 1881-1897 காலக்கட்டத்தில் திலகர் தான் அதன் உரிமையாளர் மற்றும் ஆசிரியராக இருந்தார். என்.சி. கேல்கருடன் இணைந்து அவருடைய மரணம் வரையில் இணை ஆசிரியராக செயல்பட்டார்.

டெக்கான் விவசாயிகள் நிவாரண மசோதாவை எம்.ஜி. ரானடே மற்றும் வில்லியம் வெட்டர்பர்ன் ஆகியோர் தயாரித்தனர். 1874-79 காலக்கட்டத்தில் பஞ்சத்தால் சிறு விவசாயிகள் துன்புற்ற போது, அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டது.

திலகர்

பட மூலாதாரம், Kesari Maharatta Trust, Pune

நில வருமானமாக 10 முதல் 20 ரூபாய் வரை ஈட்டும் சிறு விவசாயிகள், வட்டி முதலாளிகளுக்கு 1000 முதல் 2000 ரூபாய் வரை கடன் பட்டிருந்தனர். பஞ்சம் மற்றும் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை காரணமாகவும், பஞ்சம் காரணமாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வட்டி முதலாளிகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். சித்பவன பிராமணரான வாசுதேவ பல்வந்த் பாட்கே, தீண்டப்படாத மற்றும் மலைவாழ் சமுதாயங்களைச் சேர்ந்த தௌலாட்டியா ரமோஷி, பாபாஜி சாம்ஹர், சகாராம் மஹர் மற்றும் கொண்டு மாங்க் போன்றவர்கர் இணைந்து இந்த கிளர்ச்சியை முன்னெடுத்தனர்.

`தவறான வழிகாட்டுதலில் நடைபெறும் அற்பத்தனமான முயற்சி' என்று பாட்கேவின் இயக்கத்தை திலகர் விமர்சித்தார். "கும்பல் கூட்டி கொள்ளையடிக்கும் முயற்சி'' என்றும் இதனை விமர்சித்தார் திலகர் (The Mahratta, 9 அக்டோபர் 1881).

பாட்கேவை அரசு கைது செய்து, சிறைத் தண்டனை விதித்து ஏடென் (இப்போதைய ஏமன் நாட்டின் தற்காலிகத் தலைநகர்) சிறைக்கு அனுப்பி வைத்தது. அங்கேயே 1883ல் அவர் காலமானார். விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் துயரங்கள் நிகழாமல் தடுக்க, ரானடே மற்றும் வெட்டர்பர்ன் ஆகியோர் வேளாண்மை வங்கிகளை உருவாக்கும் திட்டத்தை முன்வைத்தனர். சிறு விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும், சௌகரியமான முறையில் கடனை திருப்பிச் செலுத்தும் நடைமுறைகள் கொண்டதாகவும் அந்தத் திட்டம் இருந்தது. அந்தச் சட்டத்தையும், வங்கிகளையும் திலகர் விமர்சித்தார்.

வட்டி முதலாளிகள் 'விவசாயிகளின் கடவுள்' போன்றவர்கள் என்று அவர் கூறினார். கடன் கொடுத்தவரின் பணத்தைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், சிறு விவசாயிகளை சிறையில் தள்ளும் வகையிலான சட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். கடைசியாக, இந்த வங்கிகளை ஏற்படுத்துவது இல்லை என்று 1885ல் அரசு முடிவு செய்தது. திலகருக்கு கிடைத்த முதலாவது வெற்றியாக அமைந்தது.

மகாராஷ்டிர சிறு விவசாயிகள் குறித்த திலகரின் போக்கு, அவருடைய வாழ்நாள் முழுக்க இதே பாணியில் தான் இருந்தது. 1897ல் பஞ்சம் ஏற்பட்டபோது, கோபால கிருஷ்ண கோகலே மற்றும் அவருடைய டெக்கான் சபா சார்பில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்தது. நிவாரணப் பணிகளுக்கு ஊதிய உயர்வும், 48.2 லட்சம் ரூபாய் தள்ளுபடியும், 64.2 லட்சம் ரூபாய் நிறுத்தி வைப்பும் அதன் மூலம் சாத்தியமனது.

திலகர்

பட மூலாதாரம், KESARI MAHARATTA TRUST, PUNE

டெக்கான் சபாவை நோயுற்றவர்களின் அமைப்பு என்று திலகர் கூறினார். ரயத்வாரி நிலப் பகுதிகளுக்காக தனியாக ஓர் இயக்கத்தை அவர் நடத்தினார். வட்டிக்கு பணம் தருபவர்களுக்குச் சொந்தமான நிலங்களுக்கு வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார் (The Mahratta, 25 பிப்ரவரி 1900, Suspension and Remission of Revenue, தலையங்கம்).

தன்னுடைய கல்வி செயல் திட்டம் முழுக்க தொடர்ச்சியாக திலகர் கடைபிடித்து வந்த சாதிய முறைகளை ஆதரிக்கும் வகையிலும், அவருடைய சிறு விவசாயிகளுக்கு எதிரான அணுகுமுறை தொடர்பு கொண்டிருந்தது. `சிறு விவசாயிகளின் பிள்ளைகளுக்கு படிக்க, எழுத, வரலாறு, புவியியல் மற்றும் கணிதம் கற்றுத் தருவதால் நடைமுறை வாழ்க்கையில் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை' என்பது திலகரின் வாதமாக இருந்தது.

அது `அவர்களுக்கு நல்லதைவிட அதிக கெடுதலையே செய்யும்' என்பது அவருடைய கருத்தாக இருந்தது. பிராமணர் அல்லாதவர்களுக்கு `தச்சு, பொற்கொல்லர், மேஸ்திரி, தையல் வேலை, வாழ்க்கையில் அவர்களின் நிலைக்கு ஏற்ற மிக சாதாரணமான தொழில்களை' கற்றுத்தர வேண்டும் என்று அவர் கூறினார். அதுதான் `கல்வியில் அறிவார்ந்த முறையாக இருக்கும்' என்று திலகர் கூறினார்.

1881 ஆம் ஆண்டில் அரசாங்கம் 200 பேர் வாழும் அனைத்து கிராமங்களிலும் ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்க வேண்டும் ன்று பூனா சர்வஜனிக் சபா கோரிக்கை விடுத்தது. அதை திலகர் எதிர்த்தார். `சிறு விவசாயிகளின் பிள்ளைகளுக்குக் கல்வி அளிப்பது பணத்தை வீணடிக்கும் செயல்' என்று அவர் கூறினார். அனைவருக்கும் கல்வி என்று ரானடே தொடர்ந்து வலியுறுத்துவதை திலகர் எதிர்த்தார். `அரசுப் பணம் என்பது வரி செலுத்துபவர்களின் பணம். அந்தப் பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை வரி செலுத்துபவர்களுக்கு தான் உள்ளது' என்று அவர் கூறினார் (The Mahratta, 15 May 1881, Our system of Education-A Defect and a Cure).

நிலவுடைமை உள்ள பிராமணர்களுக்கு மட்டுமே கல்வி தரவேண்டும் - திலகர்

பம்பாய் பல்கலைக்கழகத்தில் பிராமணர் அல்லாதோர் அதிக எண்ணிக்கையில் சேர உதவும் வகையில், நுழைவுத் தேர்வுக்கான பாடத் திட்டங்களை எளிமைப்படுத்த வேண்டும் என்று ரானடே மேற்கொண்ட முயற்சிகளையும் திலகர் எதிர்த்தார் (The Mahratta, 7 August 1881, Our University I). ஆங்கிலக் கல்வியை திலகர் எதிர்க்கவில்லை. `ஆங்கிலக் கல்வியை நாட்டில் அறிமுகம் செய்வதற்கு முன்பு நாம் அறியாமையில் இருந்த கூட்டமாக இருந்தோம்' என்று அவர் நம்பினார். நில உடமை உள்ள பிராமணர்களுக்கு மட்டுமே கல்வி அளிக்கப்ப வேண்டும், ஏழை பிராமணர்களுக்கு கூட அளிக்கக் கூடாது என்று அவர் விரும்பினார் (The Mahratta, 21 August 1881, Our University III). அவருடைய விமர்சனங்கள் தீவிரமான பிராமணர் அல்லாதோர் எதிர்ப்பை சம்பாதித்தது.

எனவே 1891-ல் தேசத்தின் கட்டமைப்புக்கு சாதி அமைப்பே அடிக்கல் என்று அவர் வாதிடத் தொடங்கினார். `நவீன கல்வி கற்ற பிராமணர் மற்றும் நவீன கல்வி கற்ற பிராமணர் அல்லாதோர் இடையில் வேறுபாடு கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. இந்த சமத்துவமின்மையை உணரத் தொடங்கிவிட்டோம். கிளர்ச்சி தொடங்கிவிட்டது' என்று அவர் கூறினார் (The Mahratta, 22 March 1891, What shall we do next? Editorial).

`சாதி மற்றும் சாதிக்கு மட்டுமே சக்தி உள்ளது' என்ற தலைப்பில் எழுதிய அவருடைய தலையங்கத்தில் (10 மே 1891) `சாதியத்தின் தாக்கம் இல்லாமல் போயிருந்தால் இந்து தேசம் என்பது நீண்ட காலத்துக்கு முன்பே காணாமல் போயிருக்கும்; ரானடே போன்ற சீர்திருத்தவாதிகள் `சாதியை அழிக்கப் பார்க்கிறார்கள். தேசத்தின் உயிர்த்துடிப்பை அழிக்கப் பார்க்கிறார்கள்' என்று அவர் கூறியுள்ளார்.

மத அடையாளங்கள் இல்லாத கல்வி முறை `மத அடிப்படைகளை மறுக்கும்' கருத்தை விதைப்பதாகக் கூறி அதை திலகர் நிராகரித்தார். பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்படும் மத அடிப்படையிலான கல்வி `மறுக்கக் கூடாத தூய்மை மற்றும் எளிமையைக் கொண்டதாக இருக்க வேண்டும். கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று பள்ளிக்கூட மாணவர்களிடம் சொல்ல வேண்டும். அதற்கு எந்த மாணவராவது கண்ணால் காணும் ஆதாரம் கேட்டால், அவரை பிரம்பால் அடித்து மௌனமாக்கிவிட வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார் (The Mahratta, 3 July 1904, Religion Education, Editorial).

திலகர்

பட மூலாதாரம், Lokamany Tilak Vichar Manch, Pune

இந்தியர்களுக்கு ஹோம் ரூல் லீக் (தாயக ஆட்சி முறை) வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். `சதுர்வர்ணம் என்ற சாதிய முறை பிரிட்டிஷ் ஆட்சியில் சிதைந்துவிட்டது' என்று கூறி ஹோம் ரூல் முறையை அவர் வலியுறுத்தினார். ஜம்காண்டி (இப்போது கர்நாடகாவில் உள்ளது) நகரின் பிராமணர் அல்லாத நிர்வாகியை திலகர் விமர்சித்தார் (The Mahratta, 21 April 1901, Non-Brahmin Craze, Editorial). கோலாப்பூர் மகாராஜாவுக்கு `புத்தி பேதலித்துவிட்டது' என்று அவர் ஏளனம் செய்தார் (The Mahratta, 15 November. 1903). சாதிய முறைக்கு தன் ஆதரவை வலியுறுத்துவதில், சங்கேஷ்வர் சங்கராச்சாரியார் (The Mahratta, 31 August 1902) மற்றும் ஆதி சங்கரர் உள்பட யாரையும் அவர் விட்டுவைக்கவில்லை.

பெண் கல்வி என்ற முயற்சிக்கும் இதேபோல திலகரிடம் இருந்து பலமான எதிர்ப்பு எழுந்தது. ரானடே புனேவில் தொடங்கிய பெண்கள் பள்ளிக்கூடத்தில் வழக்கான பாடத் திட்டங்கள் இருந்தன. அதனால் பெண்களால் உயர் கல்வி கற்க முடிந்தது. `தேசத்தில் வாழ்க்கையில் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படுவதற்கு பெண் கல்வி அவசியம்' என்று ரானடே வலியுறுத்தினார்.

பெண் கல்விக்கு எதிர்ப்பு

மராத்தா, குன்பி, சோனார், யூதர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவர்கள் பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தார்கள். அவர்களில் பலரும் தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கப்பட்ட பிரிவினரைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். சாதிகளை ஒன்றாக சேர்த்தது மற்றும் பாடத் திட்டம் குறித்து திலகர் விமர்சித்தார். `பெண்களின் பெண்மைத் குணங்களை நீக்குவதாக ஆங்கிலக் கல்வி முறை உள்ளது. அதனால் பெண்களின் மகிழ்ச்சியான உலக வாழ்க்கை மறுக்கப்படுகிறது' என்று திலகர் கூறினார் (The Mahratta, 28 September 1884).

பெண்களுக்கு `பிராந்தியக் கல்வி, நன்னெறிகள், ஊசி வேலைப்பாடுகள்' மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணி வரையில் பெண்கள் பள்ளிக்கூடம் செல்வதை அவர் எதிர்த்தார். காலை அல்லது மாலையில் தினமும் 3 மணி நேரம் மட்டுமே பள்ளிக்கூடம் நடத்த வேண்டும். எனவே பெண்கள் தங்கள் வீட்டு வேலைகளைக் கவனிக்க நேரம் கிடைக்கும் (The Mahratta, 18 September 1887 Curriculum of the Female High School, Is It In The Right Direction?) என்றும் அவர் கூறினார். `பாடத் திட்டத்தை உடனடியாக சரி செய்யாவிட்டால், ராக்மாபாய் போல கணவரை மதிக்காத பெண்கள் உருவானால் ஆச்சரியப்பட வேண்டியிருக்காது' என்று ரானடேவுக்கு திலகர் எச்சரிக்கை விடுத்தார்.

திலகர்

பட மூலாதாரம், Kesari Maharatta Trust, Pune

ராக்மா பாய் என்பவர் கல்வி கற்ற இளம் பெண். முரண்பாடான கணவர் தாதாஜி பிகாஜி உடன் சேர்ந்து வாழ அவர் மறுத்துவிட்டார். குடும்ப வன்முறைக்குப் பயந்து, அவருடன் வாழ மறுத்த பெண்ணின் வழக்காக அது இருந்தது. `ஒட்டுமொத்த இந்துக்களுக்கே அது முக்கியமான விஷயம்' என்று திலகர் கூறினார். தனது வாரப் பத்திரிகையின் 8 பக்கங்களில், 6 பக்கங்களை தாதாஜிக்கு ஒதுக்கி அவருக்கு ஆதரவு அளித்தார் திலகர். ராக்மாபாய் தன் கணவருடன் செல்ல மறுத்தால் சிறைக்குச் செல்ல வேண்டும் என்று திலகர் வாதிட்டார்.

பெண்ணுரிமைக்கு எதிர்ப்பு

`திருடர்கள், திருமண பந்தம் மீறி பாலியல் குற்றம் செய்வோர், கொலைகாரர்களை தண்டிப்பதைப் போல ராக்மாபாய், சரஸ்வதிபாய் (பண்டித ரமாபாய்) போன்றவர்களும் இந்த காரணத்துக்காக தண்டிக்கப்பட வேண்டும்' என்று அவர் வற்புறுத்தினார் (The Mahratta, 12 June 1887). ராக்மாபாய் வழக்கு, ஒப்புதல் வயது சட்டத்தின் விவாதத்திலும் தொடர்புடையதாக இருந்தது. அவர் குழந்தைப் பருவத்தில் இருந்தபோது அந்தத் திருமணம் நடந்ததால், இந்தச் சட்டத்தின் விவாதத்தில் இடம் பெற்றது. பெண்களின் திருமண வயதை 10-ல் இருந்து 12 ஆக உயர்த்த வேண்டும் என்று பி.எம். மலபாரி முன்மொழிவு செய்ததை அடுத்து இந்த விவாதம் தொடங்கியது. ஜி.ஜி. அகர்கர், எம்.ஜி. ரானடே, ஜி.கே. கோகலே மற்றும் பிற சீர்திருத்தவாதிகளை திலகர் கடுமையாகத் தாக்கினார்.

பொது நாகரிகம் கருதி, அவருடைய பல கட்டுரைகளை இங்கு மீண்டும் வெளியிட முடியாது.

1890 ஆம் ஆண்டில் 30 வயதான கணவர் ஹரி மைத்தி என்பவர் உடலுறவு கொண்டபோது 10 வயதான சிறுமி புல்மோனி இறந்ததை அடுத்து விவாதம் தீவிரமானது. ஏற்கெனவே மனைவியை இழந்திருக்கும் `அவர் மீது குற்றம் சொல்ல வேண்டாம்' என்று மக்களை திலகர் கேட்டுக் கொண்டார் (The Mahratta, 10 August 1890, The Calcutta Child-Wife Murder Case, Editorial). இந்தத் துயரமான சம்பவத்தால் சமூகத்தில் ஏறத்தாழ அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்தனர். அதனால் 1891-ல் மசோதா நிறைவேற்றப்பட்டது.

1900 ஆண்டுக்குப் பிறகு தேசியத் தலைவராக மதிக்கப்படும் நிலையில் திலகரின் போக்கில் மாற்றம் ஏற்பட்டதா? அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. `சிறு விவசாயிகளை நில உடைமையாளர்கள் மற்றும் வட்டிக்குப் பணம் தருபவர்களிடம் இருந்து விடுவித்துவிட்டது' என்று காலனி ஆதிக்க அரசின் மீது திலகர் அடிக்கடி குற்றம்சாட்டி வந்தார் (The Mahratta, 8 November 1903, Inamdar's Grievances, Editorial).

இனாம்தார்கள் மற்றும் கோட்கள் போன்ற பெரிய நில உடைமையாளர்களை அவர் தீவிரமாக ஆதரித்தார். சிறு விவசாயிகளுக்கு அதிகாரம் கிடைப்பதை எதிர்த்தார் (The Mahratta, 27 September 1903. The Khoti Bill, Editorial). 1915-ல் டி.கே. கார்வே புனேவில் பெண்கள் பல்கலைக்கழகத்தைத் தொடங்கியபோது திலகர் எதிர்த்தார். `சராசரி இந்துப் பெண்ணை தன் கணவரின் வீட்டில் இருப்பவர்களுக்கு ஆற்றவேண்டிய சிறப்புக் கடமைகளைக் கொண்ட ஒரு மருமகளாகத் தான் பார்க்க வேண்டும்' என்பது திலகரின் வாதமாக இருந்தது. `சமையல், வீட்டுப் பொருளாதாரம், குழந்தை பராமரிப்பு' என்ற விஷயங்களை மட்டும் பாடத் திட்டமாக வைக்க வேண்டும் என்று கார்வேயை திலகர் கேட்டுக் கொண்டார் (The Mahratta, 27 February 1916, Indian Women's University). பெண்களுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது திலகரின் The Mahratta இதழும், நகராட்சியில் அவருடைய ஆதரவாளர்களும் அதை எதிர்த்தனர் (The Mahratta 17 August 1919, Free and Compulsory Education in Poona).

மறுபக்கம் கம்யூனிஸ்டுகளோடு தொடர்பு

இந்தத் தாக்குதல் காலம் முழுக்க பிரிட்டனில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய உறுப்பினர்களுடன் திலகர் நெருங்கிய தொடர்பில் இருந்தார். லெனினை, ரஷியப் புரட்சியை அவர் புகழ்ந்தார். திலகரை பெருமைக்குரிய சுதந்திரப் போராட்ட வீரராக சோவியத் மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் வரலாற்றாளர்கள் கருதினர். பங்கேற்புடன் கூடிய இந்தியாவை உண்மையில் உருவாக்கிய ரானடே, கோகலே மற்றும் பிறரை `மிதவாதிகள்' என அவர்கள் ஒதுக்கிவிட்டார்கள். ரானடேவை மட்டும் அவர்கள் மறந்துவிடவில்லை. திலகரின் சிறுவிவசாயிகளுக்கு எதிரான, பெண்களுக்கு எதிரான, சாதி அமைப்புக்கு ஆதரவான செயல்பாடுகளையும் மறந்துவிட்டார்கள். 1908 ஜவுளி ஆலை வேலைநிறுத்தம் மற்றும் அவர் சிறை சென்றதை மட்டும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

ஒரு நூற்றாண்டு கடந்துவிட்டது. மகாராஷ்டிராவில் கடனைக் கட்ட முடியாமல் திவாலாகும் சிறு விவசாயிகள் இன்னமும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சாதி மோதல் தீவிரமாக உள்ளது, பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள். 1880ல் மிகவும் துடிப்பான மகாராஷ்டிராவை கையில் எடுத்த திலகர், 1920ல் மோசமாகப் பிளவுபட்ட மகாராஷ்டிராவை விட்டுச் சென்றார். காலனியாதிக்கம் நிலவியதைக் காரணம் காட்டி அவரது அத்துமீறல்களை மன்னிக்கமுடியாது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: